ஊட்டி : ஊட்டியில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2510 பால் வழங்கும் உறுப்பினர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்து 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்துடன் கோவை ஒன்றியத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்து 800 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்து 800 லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாதத்திற்கு ரூ.64 லட்சம் மதிப்புள்ள பால் உபப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தை நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகிேயார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெண்ணை குளிர்ச்சியூட்டும் மையத்தினை திறந்து வைத்து, வெண்ணை உற்பத்தி செய்வது, இதர பொருட்கள் தயாரிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.இதில், நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல், விற்பனை செய்வது குறித்தும், ஆவின் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆவின் நிறுவன பொது மேலாளர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். முன்னதாக ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பாலின் தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடினர். அப்போது, பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்தனர். அதனை நிவரத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார். பின், ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஜெர்சி பொலி காளை பண்ணையை ஆய்வு செய்தார். மேலும், எமரால்டு பகுதியில் ஆவின் பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்த ஆய்வின் போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகளுக்கு டோஸ் ஆவின் நிறுவனத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், உடனடியாக அந்த ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்….