மதுரை: தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்துவதாக இருந்தது. ஆனால், தொகுதிகளை மறுசீரமைக்கவில்லை என்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில் அரசை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தை கவனிக்க அரசாணை போடப்பட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது. மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டால், கொரோனா மேலும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….