வங்க தேசத்தின் சமீபத்தில் ராணி என்கிற கன்றுக்குட்டிதான் ஹாட் வைரல். உலகிலேயே மிகக் குள்ளமான கன்று என்று இதனைச் சொல்கிறார்கள். புட்டி அல்லது பூடான் வகையை சேர்ந்த 23 மாத கன்றுக்குட்டியான ராணியின் உயரம் வெறும் 51 சென்டி மீட்டர் மட்டும்தான். அதன் எடை 28 கிலோ.வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சரிகிராமில் இருக்கும் பண்ணை ஒன்றில் வளரும் ராணியை காண, கொரோனா ஊரடங்கு நேரத்திலும் 15,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். உலகின் மிகச்சிறிய பசு இது எனக்கூறி அதன் உரிமையாளர் ஹசன் ஹௌலதார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.வங்கதேசத்தின் தென் மேற்கில் இருக்கும் நாகான் மாவட்டத்தில் உள்ள வேறு ஒரு பண்ணையில் இருந்து ராணியை கடந்த ஆண்டு வாங்கினார் ஹசன். ராணிக்கு நடப்பதில் பிரச்னை இருப்பதாலும், மற்ற பசுக்களை கண்டு அச்சம் ஏற்பட்டதாலும், அதனை தனியாக வைத்திருந்ததாக கூறுகிறார் ஹசன். ‘‘ராணி அதிகம் சாப்பிட மாட்டாள். நாளொன்றுக்கு இரண்டு முறை சிறிய அளவில் தவிடு மற்றும் வைக்கோல் உண்பதுதான் வழக்கம்” என்கிறார் ஹசன். ‘‘ராணிக்கு வெளியில் சுற்றித்திரிவது பிடிக்கும். யாராவது தூக்கினால் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.” என்றும் சொல்கிறார். இப்போது உலகின் மிகச்சிறிய பசு என்ற பட்டம் இந்தியாவில் உள்ள மணிக்யம் என்ற பசுவிடம் உள்ளது. இதன் உயரம் 61.1 சென்டி மீட்டர். கின்னஸ் சாதனை புத்தகக் குழுவினர் இந்தாண்டு ராணியை காண வருவார்கள் என்று ஹசன் சொல்கிறார். …
உலகின் மிகக் குள்ளமான கன்றுக்குட்டி
previous post