சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து: இந்த உலக மகளிர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறந்த நாளில் நாம் பெண்களின் பெண்மையை மதித்து கொண்டாடுவோம்.நம் நாட்டில் ஆன்மிகம் அறிவுசார் சமூக மற்றும் அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும்.இந்த நன்நாளில் நம் பெண்கள் தங்கள் அயராத பங்களிப்பை தொடர வாழ்த்துகள்.கே.எஸ்.அழகிரி (தலைவர் தமிழக காங்கிரஸ்): நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மகளிரின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: மருந்துகள் எப்படி நம் உடல் நிலையை சீராக்கி நலப்படுத்துகிறதோ, அதுபோல மகளிரும் நம் குடும்பத்தை சீராக்கி நிலை நிறுத்துகிறார்கள். மகளிர் தினத்திலே பெருமைக்குரிய பெண்குலத்தின், அருமைகளை போற்றி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராமதாஸ் (பாமக நிறுவனர்): பூவுலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான இயக்கங்களை உலகில் இன்றைய நிலையில் பெண்களும், சிறுமிகளும் தலைமையேற்று நடத்துகின்றனர்; அவர்களின் தலைமைப்பண்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நீடித்த எதிர்காலத்திற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்): தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றுச் சிறப்புக்கு உரியனவாகும். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, சமூகத்தில் ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்குச் சென்று சீரும், சிறப்புமாக வாழ அதிமுக எந்நாளும் உழைக்கும்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): மகளிருக்கான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சம ஊதியம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றிய மாநில அரசும், தனியாரும் தங்களுக்குள்ள கடமையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஒத்த கருத்தோடு நிறைவேறி, பெண்கள் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும்.அன்புமணி (பாமக இளை ஞரணி தலைவர்) : உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்கள், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் ஆகியோர் மகளிர்தின வாழ்த்துக்களை தெரிவித் துள்ளனர்….