தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது வடுகபாளையம் கிராமம். இங்கு சுமார் 53 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்காலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. உருக்கு ஆலை சுற்றி 7 கிராமங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு உருக்கு ஆலை அமைந்தால் நுரையீரல் புற்று, மலட்டுத்தன்மை, சுவாச கோளாறு மற்றும் கால்நடைகளும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் இந்த ஆலையை துவக்குவதற்காக கொடுத்துள்ள உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சியின் அனுமதியைப் பெறாமல் நடத்தப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 27ம் தேதி 500-க்கும் மேற்பட்டோர் காங்கயம்-தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இச்சிப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். 4வது நாளான நேற்று தங்களது கால்நடைகளுடன் கோயில் திடல் முன் திரண்டு உருக்கு ஆலைக்கு எதிராகவும், கட்டுமான பணிகளை அரசு தடுத்து நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று (1ம் தேதி) திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்….