உடுமலை, செப். 17: கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் உள்ளன. உடுமலை நகரில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். உடுமலை நகரில் பொள்ளாச்சி- திருப்பூர் ரோடு சந்திப்பு, தளி ரோடு- பழனி ரோடு சந்திப்பு, பைபாஸ் ரோடு- தாராபுரம் ரோடு- பழனி ரோடு சந்திப்பு, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா, கழுத்தறுத்தான் பள்ளம்- குருமலை ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.
இதில், பெரும்பாலான சிக்னல்கள் இயங்காமல் பழுதடைந்து உள்ளது. போக்குவரத்து போலீசாரும் அங்கு கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.உடுமலை ரவுண்டானா பகுதியை கடந்து ஐஸ்வர்யா நகர், சிவசக்தி காலனி, ராஜேந்திரா சாலை, பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.சிக்னல் செயல்படாததால் பாதசாரிகளும் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபரீதம் நிகழும் முன் போக்குவரத்து சிக்னல்களை சரி செய்ய வேண்டும். என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.