திண்டுக்கல், ஜூன் 25: காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சியினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் பரமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன், மேற்கு மாவட்ட செயலாளர் பூமணிகண்டன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் பாலுசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த ஜூன் மாதம் குருவை சாகுபடிக்கு தர வேண்டிய 140 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய இறப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
கள்ளுக் கடைகளை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக் பாண்டியன், இளைஞரணி செயலாளர்கள் பெரியசாமி, பொன்னர், மகளிர் அணி தலைவர் ஜெயா, செயலாளர் கன்னீஸ்வரி உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.