இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குளாகியுள்ளனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடந்து பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. …