சென்னை: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 47 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 47 மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் விடுவிக்கப்பட்டு சென்னை வந்தடைந்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை தந்த அவர்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வருகை தந்த மீனவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தனி வாகனங்களில் அழைத்து செல்லப்பட உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஜனவரி 25ம் தேதியே இலங்கை சிறையில் இருந்து வெளியான நிலையில், கொரோனா தொற்று இருந்ததாக கூறி யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர்கள், மருத்துவ வசதி, உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ராஜமாணிக்கம் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். …