சென்னை: சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கவும், விபத்து ஏற்பட்ட, 48 மணி நேரத்துக்கு கட்டணமில்லாத சிகிச்சை அளிக்கும் வகையிலும், ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை பெற தகுதி உடையவர்கள்.கடந்த, 18ம் தேதி துவங்கப்பட்ட திட்டத்தில் முதல் நாள் 9 பேருக்கு 1 லட்சத்து 37 ஆயிரம், 19ம் தேதி 98 பேருக்கு 13 லட்சத்து 11 ஆயிரத்து 500, 20ம் தேதி 210 பேருக்கு 12 லட்சத்து 6 ஆயிரம், 21ம் தேதி 139 பேருக்கு 14 லட்சத்து 39 ஆயிரத்து 300ம், 22ம் தேதி 242 பேருக்கு 19 லட்சத்து 57 ஆயிரத்து 100ம், 23ம் தேதி 273 பேருக்கு 30 லட்சத்து 54 ஆயிரத்து 200 என இதுவரை 971 பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் 778 பேருக்கு 66 லட்சத்து 89 ஆயிரத்து 850 செலவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 193 பேருக்கு 24 லட்சத்து 15 ஆயிரத்து 250 என மொத்தம் 971 பேருக்கு 91 லட்சத்து 5 ,100 வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தில் செலவிடப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….