விருதுநகர், அக்.8: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்கி நடடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நேற்று மனு அளித்தனர். மனுவில், மாவட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.
விலைவாசி உயர்வால் அத்தியாவசிய உணவு பொருட்கள் வெளிச்சந்தையில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. உணவு பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் அடித்தட்டு மக்கள் ரேசன் விநியோகத்தை நம்பியே உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி ரேசனில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பண்டிகை காலமாக இருப்பதால் ரவை, மைதா, பலசரக்கு பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதம் 30 நாட்களும் ரேசன் கடைகள் திறந்திருந்து எந்நேரமும் மக்கள் கடைகளுக்கு சென்றாலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.உடன் மாநில நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.