Monday, September 30, 2024
Home » இது நல்லதல்ல

இது நல்லதல்ல

by kannappan

ஆளுநர் என்பவர் மாநிலத்துக்கும் ஒன்றியத்துக்கும் இடையே பாலமாக இருந்தால் நல்லது. தான் பதவி வகிக்கும் மாநிலத்தின் நலன் காக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், அண்மை காலங்களில் ஆளுநர் என்பவர், ஒன்றிய அரசின் ஏவலாளியாக மாறிவிட்ட மோசமான சூழல் உள்ளது. மாநில ஆட்சியாளர்களுக்கு தேவையற்ற இடைஞ்சல் கொடுக்கும் பதவியாகவே ஆளுநர் பதவியை மாற்றிவிட்டது பாஜ. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர், நாகாலாந்து ஆளுநராக இருந்தவர். நாகாலாந்தில் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு உதவியவர் என்பதால் அவருக்கு அங்கு ஆளுநர் பதவி தரப்பட்டது. உளவுத் துறையை பின்னணியாக கொண்ட இவரை தமிழக ஆளுநராக நியமித்தபோதே ஒன்றிய அரசின் உள்நோக்கம் என்ன என்று சந்தேக கேள்விகள் எழுந்தன. ஏனென்றால், நாகாலாந்து மாநில அரசு நிர்வாகத்தில் அவரது தலையீடு அதிகமிருந்தது என்று அம்மாநில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், தமிழகத்துக்கு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி யாரும் இதுவரை ஆளுநராக நியமிக்கப்பட்டதில்லை. இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி அவரது உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளுநர் உரையா அல்லது ஆன்மிக சொற்பொழிவா என்ற சந்தேகத்தை தமிழக மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. அந்த அளவுக்கு அவரது உரையில் காவி சாயம். ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்க வேண்டும். திருக்குறளில் தெய்வீகம் கமழுகிறது என்று அவர் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாறு, ஒரு நூற்றாண்டு காலமாக இந்நாட்டு மண்ணின் மணமாகக் கொழிக்கும் சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் – இவற்றின் தாக்கத்தை குறைந்தபட்சமாவது உணர்ந்திருக்க வேண்டாமா? மத ஓட்டை இம்மண்ணின் மக்கள் நிராகரிப்பதன் பின்னணியை அறிந்திருக்க வேண்டாமா? நீட் வேண்டாம் என்பது தமிழக மக்களின் நிலை. இது தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காதவர்தான் ஆளுநர். அது சாதாரண தீர்மானம் அல்ல. 7 கோடி தமிழ் மக்களின் உணர்வு. அனிதாக்களை பறிகொடுத்த வேதனை, இனியும் நம் மாணாக்கர்களை நீட் தேர்வுக்காக பலி கொடுக்கக் கூடாது என்பதால் நிறைவேற்றப்பட்டதுதான் அந்த தீர்மானம்.  இது பற்றி தன்னுடைய உரையில் எதுவும் குறிப்பிடாத ஆளுநர், நீட் வந்த பின் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். அத்தோடு ‘‘தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும்” என்ற கருத்து உருவாகும் வகையில், அதாவது இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆளுநர். தமிழக மக்களின்  குரலாக ஆளுநர் பேசுவது நல்லது. அதைவிட்டு விட்டு தனியாவர்த்தனம் வாசிப்பது நல்லதல்ல. …

You may also like

Leave a Comment

14 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi