மதுரை, செப். 29: மதுரையில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட லாரிகளின் உரிமையாளர்களுக்கு, ரூ.8.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட வணிகவரித்துறை தனிப்படை அதிகாரிகள், வணிகவரி சார்ந்த முறைகேடுகளை தடுக்க, கடந்த 24ம் தேதி முதல் மதுரையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திருநெல்வேலி மற்றும் கேரளாவிலிருந்து 67.31 டன் இரும்பு கழிவுகளை ஏற்றி வந்த, ஐந்து லாரிகளை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அந்த லாரியிலிருந்த சரக்குகள் முறையான ஆவணங்களின்றி, பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதாக போலி ஆவணங்களுடன் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 5 லாரிகளையும் பறிமுதல் செய்த வணிகவரித்துறையினர், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.8.04 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட வணிகர்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வணிகவரித்துறையின் மதுரை நுண்ணறிவு கோட்ட இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.