சென்னை: ஆன்லைனில் விளம்பரம் செய்து போலி செல்போன்களை பலரிடம் விற்று பல லட்சம் மோசடி செய்த வாலிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் பகுதியை சேர்நத் ராஜேஷ் (34), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பிரபல நிறுவனத்தின் விலை உயர்ந்த ெசல்போன் ₹10 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாக விளம்பரம் பார்த்தேன். அதை வாங்க முடிவு செய்து, அந்த விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, மறு முனையில் பேசிய நபர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வந்து பணத்தை கொடுத்துவிட்டு, செல்போனை வாங்கி செல்லுங்கள் என்று கூறினார். அதன்படி நான் சென்று ₹10 ஆயிரம் கொடுத்து செல்போனை வாங்கி பார்த்தபோது, அது சீனா செல்போன் என தெரியவந்தது. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது, என்னை மிரட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே, போலி செல்போன் விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த அப்துல் மஜீத் (40), ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பிரபல நிறுவனத்தின் விலை உயர்ந்த செல்போன் இருப்பதாக புகைப்படத்துடன் போலியான விளம்பரம் செய்து இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் போலி செல்போன்களை விற்பனை செய்து பல லட்சம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. …