ஆண்டிபட்டி, ஜூலை 7: ஆண்டிபட்டி காந்தி நகர் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி காந்தி நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருவில் மின்கம்பங்கள் வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் வாகனங்கள் செல்லும்போது மின் வயர்கள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகளின் மொட்டை மாடிகளின் மிக அருகில் செல்லும் வயர்களாலும் குழந்தைகள் விளையாடும் போது விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகத்திலும் புகார் கூறினர். இதையடுத்து ஆண்டிபட்டி மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்த்தனர். தாழ்வாகச் செல்லும் மின் வயர்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் முயற்சிக்கும் போது அப்பகுதியில் உள்ள சில தனி நபர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் தொடர்கிறது. எனவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.