திருவிடைமருதூர், மே 25: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறையில் நவநீதகிருஷ்ணன் கோயில், பாவனா மகரிஷி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம விட்டல்தாஸ் மகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாகுதியை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோயில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.
மாலை வான வேடிக்கையுடன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் கமலா, திருவிடைமருதூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், மதிமுக மாநில செயலாளர் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிருஷ்ணன் கோயில் தெருவாசிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.