அம்பத்தூர்: ஆடிக்கிருத்திகைக்கு மீன் குழம்பு வைத்ததால் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்,அவர் இறந்துவிட்டதாக கருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் எல்லையம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார்(40). பெயின்டர். இவரது மனைவி துர்கா(36). இவர்களுக்கு மோகன்(17), ஜீவா(15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குமார், வேலை முடிந்து போதையில் வீட்டுக்கு வந்தார். துர்கா வீட்டில் மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தார். இதனை பார்த்து குமார், ‘ஆடிக்கிருத்திகைக்கு மீன்குழம்பு ஏன் செய்தாய்’ என கேட்டு துர்காவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த இரும்பு ராடால் துர்காவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் துர்கா கீழே சரிந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை பார்த்த குமார், துர்கா இறந்தாக நினைத்து, போலீசார் விசாரணைக்கு பயந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், வெளியில் சென்றிருந்த இரண்டு மகன்களும் வீடு திரும்பினர். அப்போது, தாய் துர்கா, ரத்தவெள்ளத்தில் கிடப்பதையும், தந்தை குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்காவை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், குடும்ப தகராறில் மனைவியை தாக்கியபோது இறந்ததாக நினைத்து, போலீசாருக்கு பயந்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. …