அவிநாசி, டிச.19:அவிநாசி அருகே கமிட்டியார் காலனி சக்தி, சித்தி விநாயகர் கோயிலில் மக்கள் நலம் வேண்டி அரசு, வேம்பு மரங்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஓம் சக்தி ஆன்மிக குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம், விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் அருகருகே வளர்ந்துள்ள அரச மரம் சிவனாகவும், வேப்ப மரம் பார்வதியாகவும் கருதப்பட்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் வளையல், மஞ்சள் கயிறு, இனிப்பு, பழ வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகள் வைத்து கூட்டு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.