காஞ்சிபுரம்: இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (32). கூலித்தொழிலாளி. இவரின் மனைவி கஸ்தூரி (28).
திருமணமாகி ஓராண்டு ஆனநிலையில் கர்ப்பமாக இருந்த கஸ்தூரி பிரசவத்திற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் 2 ஆண் குழந்தைகள் பிறந்தனர். பின்னர், கஸ்தூரி சுய நினைவில்லாமல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கஸ்தூரி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.