ஈரோடு, செப்.15: கோவை மாவட்டம் மோளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(60). இவர், நேற்று அவரது உறவினர்களுடன் கோபியில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக கோவையில் இருந்து பஸ் மூலம் பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் வந்தார். பின்னர், பாக்கியலட்சுமி மற்றும் அவரது உறவினர்களுடன் பெருந்துறையில் இருந்து கோபி செல்வதற்கு தயராக இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சில விநாடிகளிலேயே பாக்கியலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் மாயமானது. மர்மநபர்கள் பறித்து இருக்க கூடும் என நினைத்து கூச்சலிட்டார். சத்தம் கேட்ட பஸ்சின் டிரைவர், பஸ்சை பயணிகளுடன் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி சென்றார்.
இதையடுத்து போலீசார் ஒவ்வொரு பயணிகளாக சோதனை செய்தனர். ஆனால், யாரிடமும் செயின் இல்லை என்பதை உறுதி செய்தபின், பயணிகளை ஏற்றிக்கொண்டு கோபி நோக்கி பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்க பதிவு செய்து, செயின் பறித்து சென்ற மர்மநபர்களை பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவமும், பயணிகளுடன் பஸ்சை போலீஸ் ஸ்டேஷன் ஓட்டி சென்று சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.