திருவள்ளூர்: மாநில அளவில் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் முதல் முறையாக ஒரே நாளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் நடைபெற்றது. அதன்படி திருவள்ளூர் ஒன்றியம் வேப்பம்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி தலைவர் சதா பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியை பன்மொழிபாவை முன்னிலை வகித்தார். இதேபோல், செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி தலைவர் டெய்சி ராணி அன்பு தலைமையில் நடைபெற்றது. வேதவல்லி சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் திருவள்ளுவன், ஜான்சன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.புழல்: புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், இன்னாள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பள்ளி வளர்ச்சி, இல்லம் தேடி கல்வி, மேலாண்மை குழு பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல், புழல் அடுத்த சூரப்பட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை சாந்தி தலைமை தாங்கினார். 32வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர். மேலும் புழல், செங்குன்றம், வடகரை, சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. …