சென்னை: அரசு பள்ளிகளில் இயங்கி வரும் மழலையர் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் இயங்கி வரும் 2,381 மழலையர் பள்ளிகள் மூடப்படுவதாகவும், அந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் முன்னர் பணியாற்றிய பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப் படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இம்முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இது அடித்தட்டு ஏழை, எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளிலும் மழலையர் கல்வி கொடுப்பதால் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களின் குழந்தைகள் பெரிதும் பயன்பெற்றனர். அரசு மழலையர் பள்ளிகளில் ஆங்கில போதனையும் பெரும் ஊக்கமாக உள்ள நிலையில், அதனை கைவிடக்கூடாது என அரசை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மழலையர் பள்ளிகளை மூடினால் தனியார் கல்வி சாலைகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை; அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். …