Saturday, October 5, 2024
Home » அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

by Karthik Yash

சென்னை, அக்.5: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் – கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் 271 கி.மீ. தொலைவுக்கு முதற்கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கவாச் தொழில்நுட்பம் என்பது ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் ஆகும். ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான் கவாச் தொழில்நுட்பம். 2022ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது.

இது எப்படி வேலை செய்யும் என்றால், ரயில் பாதையின் நடுவில், ஒவ்வொரு 4 கி.மீ. தொலைவில் ‘சிப்’ பொருத்தப்பட்டு இருக்கும். இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். ‘எஸ்பிஏடி சிக்னல் பாஸிங்அட் டேஞ்சர்’ என்று அழைக்கப்படும் இந்த சமிக்ஞையானது, ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். அதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும். ஒரு கி.மீ. தொலைவுக்கு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ₹50 லட்சம் வரை செலவாகும்.

முதன்முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிமீ தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் கவாச் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது இந்த கவாச் தொழில் நுட்பத்தை தெற்கு ரயில்வேயில் முதல்கட்டமாக 3 வழித்தடங்களில் 271 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் படிப்படியாக 2,216 கி.மீ. தொலைவுக்கு கவாச்தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை – அரக்கோணம் வரை 68 கி.மீ, தொலைவுக்கும், அரக்கோணம் – ரேணிகுண்டா வரை 65 கி.மீ, தொலைவுக்கும், சென்னை- கூடூர் வரை 138 கி.மீ. தொலைவுக்கும் கவாச் தொழில்நுட்பம் நிறுவப்பட இருக்கிறது. முதல் கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக பல பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ஜோலார்பேட்டை – சேலம் – ஈரோடு, விழுப்புரம் – காட்பாடி, கரூர்- திண்டுக்கல், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, மதுரை – கன்னியாகுமரி, சொரனூர் – சேலம், ஈரோடு – கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

seventeen + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi