சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டு தோறும் அவர்களது பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கிணங்க 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி 19ம் தேதி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து இருவர் மட்டும் தெரிவு செய்யப்பட்டு சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 வீதம் தனியே வழங்கப்படும். போட்டி நாள் 19ம் தேதி. வட சென்னையில் தருமமூர்த்தி ராவ்பகதூர் காலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி பெரம்பூர், தென்சென்னையில் ராமகிருஷ்ண மடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மத்திய சென்னையில் தியாகராய நகர், குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் காலை 10 மணிக்கு நடைபெறும். கல்லூரி போட்டிகள் வட சென்னையில் அம்பேத்கர் கலைக்கல்லூரி வியாசர்பாடி, சென்னை, தென் சென்னையில் மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், மத்திய சென்னையில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி பிராட்வே நடைபெறும்….