அம்பத்தூர், செப். 30: அம்பத்தூர் டி.சி.எஸ் மைதானம் அருகே அதிகளவில் குட்கா கைமாற்றப்பட உள்ளதாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, மூட்டை மூட்டையாக குட்கா வைத்திருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், செங்குன்றம் கிராண்ட் லேண்ட் கரிகால சோழன் 5வது தெருவை சேர்ந்த கண்ணன்(51) என்பதும், இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும், இவர் மீது கூடுவாஞ்சேரி, கவரப்பேட்டை, குன்றத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குட்கா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.