திருப்பூர், டிச.3: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் இளைஞரணி செயல்வீர்கள் கூட்டத்தில், இளைஞரணியினர் வெண் சீருடையில் பங்கேற்க வேண்டும் என வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (3ம் தேதி) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்டம் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொடுவாய் என்.காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.
இதில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இளைஞர் அணி துணை செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர், வாக்குச்சாவடி வாரியாக உள்ள இளைஞர் அணியினர் வென் சீருடையுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கராஜ் கூறியுள்ளார்.