பல்லாவரம்: அனகாபுத்தூர் பிரதான சாலையில் புகழ் பெற்ற அகத்தீஸ்வரர் கோயில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். கோயில் எதிரில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதில் பாசி படர்ந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் மாசடைந்து காணப்பட்டது. இதனால், தெப்ப குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், தமிழகமெங்கும் பழமையான கோயில்களில் ஒவ்வொரு மாதமும் 4வதாக வரும் ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பக்தர்கள் குழுவான இறைப்பணி மன்றத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று இந்த கோயிலுக்கு வந்து, தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, கோயில்களில் உழவாரப்பணி செய்வதன் நன்மை குறித்தும், கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.