கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டிருக்கிறது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. தொடர்ந்து, பொருளாதார பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்சேவை ஆட்சியிலிருந்து விலக வலியுறுத்தி நாளை மிகப்பெரிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார். இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இலங்கை முழுவதும் இன்று ( ஏப்ரல் 2 ) மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுதிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. …