சென்னை: அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன், சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். மேலும், பண்டிகை நாட்கள் என்பதால் பலகட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.தனியார் மருத்துவமனை சார்பில், சென்னை மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது: மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் பாதிப்பை தடுக்க முடியும். இதற்காக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேலானவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், டிரோன்கள் மூலமாகவும், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு உள்ளே வருவோர், போவோரையும் கண்காணிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் மூலம் 7,800 குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரவுடியிசம் ஒழிப்பு என்பது தொடர் நடவடிக்கை ஆகும். சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்….