கோவை, செப். 25: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில், மாநகர் மாவட்ட மதிமுக பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் செல்வம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 6 மாதங்களாக துறை ரீதியாக சுங்கம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்படும் சூழ்நிலையில் வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கடை ஒன்றுக்கு சுங்க கட்டனம் நாள் ஒன்றுக்கு ரூ.150 நிர்ணயம் செய்து, வசூல் செய்துகொள்ள உத்தரவிட வேண்டுகிறோம். மேலும், மாநகராட்சிக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய குத்தகைக்கு விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மேற்கு மண்டலம் 45 வது வார்டுக்கு உட்பட்ட சாயிபாபாகாலனியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் போன்ற ஊர்களுக்கு செல்ல, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும். மேலும், சாயிபாபாகாலனி பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், உடனடியாக மேற்கண்ட பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.