ஜெனீவா: உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 10வது நாளை எட்டியுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, உக்ரைனில் போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 331 பேர் கொல்லப்பட்டதாகவும், 675 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது. மேற்கண்ட உயிரிழப்புகள் யாவும் ஐ.நா-வால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போர் தொடங்கியதில் இருந்து 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பபடி, உக்ரைனில் இருந்து சுமார் 6,50,000 பேர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றுள்ளனர்; மேலும் சுமார் 1,45,000 பேர் ஹங்கேரிக்கும், 1,03,000 பேர் மால்டோவாவிற்கும், 90,000க்கும் அதிகமானோர் ஸ்லோவாக்கியாவிற்கும் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைன் தரப்பில் வெளியான அறிக்கையில், ரஷ்ய படையை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும், ஏராளமான ராணுவ தளவாடங்கள், ஹெலிக்காப்டர், விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …