Sunday, September 8, 2024
Home » ஜிம்பாப்வேயுடன் 3வது டி20; 23 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது இந்தியா

ஜிம்பாப்வேயுடன் 3வது டி20; 23 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது இந்தியா

by Suresh

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 3வது டி20 போட்டியில், 23 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், கேப்டன் கில் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி 8 ஓவரில் 67 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஜெய்ஸ்வால் 36 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சிக்கந்தர் பந்துவீச்சில் பென்னட் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேற, கில் – ருதுராஜ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். கில் 66 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), ருதுராஜ் 49 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி முஸரபானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 12 ரன், ரிங்கு சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஜிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர், முஸரபானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 7 ஓவரில் 39 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

மருமானி 13, சிக்கந்தர் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்த நிலையில், டியான் மையர்ஸ் – கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். டியான் 45 பந்தில் அரை சதம் அடித்தார். கிளைவ் 37 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வாஷிங்டன் சுந்தர் சுழலில் ரிங்கு வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டியான் – மசகட்சா இணை கடுமையாக முயற்சித்தும், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டியான் மையர்ஸ் 65 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), வெலிங்டன் மசகட்சா 18 ரன்னுடன் (10 பவுண்டரி, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் கான் 2, கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். வாஷிங்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி ஹராரேவில் நாளை மறுநாள் நடக்கிறது.

You may also like

Leave a Comment

twenty − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi