மதுரை: பெண் போலீசார் குறித்து தவறாக பதிவு செய்ததற்காக யூடியூபர் சங்கரை, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்தது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார், சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை சிறையில் இருந்த சங்கரை கஞ்சா வழக்கிலும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி, சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.