கரூர்: கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(43). பிரியாணி கடை வைத்துள்ள இவரிடம், சென்னையை சேர்ந்த யூடியூபர் விக்னேஷ் என்பவர் ஆன்லைனில் பிரியாணி பிசினஸை அதிகமாக்கி இரட்டிப்பு லாபம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பி விக்னேஷிடம் கிருஷ்ணன், அவரது நண்பர் ராஜா ஆகியோர் ரூ.7 லட்சத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அவர் கூறியபடி பிசினஸை இரட்டிப்பாக்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த விவகாரம் யூடியூபர் சங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து விக்னேஷை மற்றும் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என அனுமதி கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல், கரூர் டவுன் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கர், கரூர் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் நேற்று காலை 11 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, 4 நாட்கள் போலீஸ் காவலில் சங்கரை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.