Wednesday, June 26, 2024
Home » யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு: வரிசைபடிதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.! ஐகோர்ட் உத்தரவு

யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு: வரிசைபடிதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.! ஐகோர்ட் உத்தரவு

by Mahaprabhu

சென்னை: குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து யூடியூப்பர் சங்கரின் தாய் தொடர்ந்த வழக்கு வரிசைப்படிதான் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் கோரி மனு கொடுத்தால் சட்டத்திற்கு உட்பட்டு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. யூடியூப்பர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி பி.பி.பாலாஜி, அரசுத்தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரினார். இதனையடுத்து, இந்த வழக்கை வழக்கமான நடைமுறையின்படி, வரிசையாகத் தான் விசாரிக்கப்படும்.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பின்னரே இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, இடைக்காலமாக விடுதலை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த கோரிக்கை ஏற்க தக்கதல்ல என கூறினார். இதனையடுத்து, இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மனுவை எட்டு வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi