யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

மதுரை: யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 15ம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் சென்ற போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் அஜாக்கிரதையாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்போனை பேசிக்கொண்டே காரை ஓட்டியதாக பிணையில் வெளிவர முடியாத வழக்கு தொடரப்பட்டிருந்தது.

8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அறிந்த டி.டி.எஃப். வாசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், டி.டி.எஃப். வாசனின் தயார் சுஜாதா. காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது இருதரப்பும் வாதங்கள் செய்யப்பட்டது. வாதங்களை கேட்டு கொண்ட நீதிபதி, டி.டி.எஃப்.வாசனின் தாய் மனுதாரர் என்பது தெரியவருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அதே போன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே காரை ஒப்படைக்க முடியாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு: கேரள அமைச்சர் கே.ராஜன் குற்றசாட்டு

உள்ஒதுக்கீடு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!!

வயநாடு நிலச்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?: தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!!