செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் பகுதியில் நேற்று 10க்கும் அதிகமான இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வீராபுரம் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், மோதிக்கொண்ட இளைஞர்கள் அனுமந்தை மற்றும் சத்தியாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சந்தியாநகர் பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (21) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சத்தியராஜ் (35), மணிகண்டன் (24), தினேஷ் (25), சுகுமார் (24), வெங்கடேசன் (27), ஸ்ரீதர் (23) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், எங்க ஏரியாதான் கெத்து என கெத்து காட்ட மோதல் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 7 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.