தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் பைக் மீது தனியார் நிறுவன பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கொருக்குப்பேட்டை சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் தருண் (23). இவர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கொருக்குப்பேட்டை சி.பி ரோடு வழியாக தருண் தனது பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து தருண் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தருண் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தருண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணலியைச் சேர்ந்த பேருந்து டிரைவர் ரவி (50) என்பவரை கைது செய்தனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.