கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஒரே தெருவை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் மாயமாகினர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை தெலுங்கு காலனி தெருவை சேர்ந்தவர் வெங்கட் மகள் பவித்ரா (20). சேகர் மகள் ரஞ்சிதா (18). நாகராஜ் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (20) ஆகிய மூன்று பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் நேற்றுமுன்தினம் வீட்டை விட்டு கிளம்பிய இந்த 3 பேரும் அருகில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும், இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதை அறிந்த பெற்றோர்கள் காரப்பட்டு சக்திவேல் சாலை, தச்சூர் கூட்ரோடு, பழவேற்காடு சாலை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியும் மாயமானது தெரிய வந்தது. உடனே, இது குறித்து இளம் பெண்கள் 3 பேரும் கிடைக்காத காரணத்தினால். பெற்றோர்கள் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், விசாரணையில் மாயமான மூவரின் செல்போன்களும் வீட்டிலேயே இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் மூவரும் கடத்தப்பட்டார்களா? அல்லது காதல் வயப்பட்டு திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் அவர்களை தேடுகின்றனர்.
பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேம்பேடு எல்லை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் துளசி (19). இவர் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நெட் சென்டரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலைக்குப் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் இவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, துளசியின் தந்தை முரளி தன் மகள் திடீர் மாயம் என பொன்னேரி போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.