திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் மஞ்சள் நிற படலம் மிதப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன்காரணமாக மீன்வளம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள ஆற்றில் 8க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன், நண்டு மற்றும் இறால்களை பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு முக்கிய வருமானம் இதன்மூலம் கிடைத்து வருகிறது. இந்த ஆற்றில் அனல் மின்நிலையத்தின் சுடுநீர் சாம்பல் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஒருவருடமாக முகத்துவார ஆற்றில் அடிக்கடி மஞ்சள் நிறத்தில் கழிவுகள் மிதப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு அழிவின் விழிம்புக்கு செல்லும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பக்கிங்காம் கால்வாய் பகுதியில் இருந்து மஞ்சள் நிற கழிவுகள் முகத்துவார ஆற்றை நோக்கி மிதந்து வந்ததால் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ‘’மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து முகத்துவார ஆற்றையும் மீன் வளத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவேண்டும்’ என்றனர்.