புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சர்ச்சை பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறினார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், ‘எனக்கும் மல்யுத்த கூட்டமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், என்னுடைய அடுத்த இலக்கு லோக்சபா தேர்தல் தான்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்ததை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் ஒன்றிய அரசுடன் பேசுவார்களா அல்லது நீதிமன்றத்திற்கு செல்வார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்விவகாரத்தில் என்னுடைய பங்கு ஏதும் இல்லை’ என்றார். முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அவரது இல்லத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் சந்தித்தார். விரைவில் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.