Friday, September 13, 2024
Home » உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம்: விழிப்புணர்வு வாகனத்தை துணை மேயர் தொடங்கி வைத்தார்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம்: விழிப்புணர்வு வாகனத்தை துணை மேயர் தொடங்கி வைத்தார்

by Karthik Yash

சென்னை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, வரும் 24ம்தேதி வரை குடும்பநல கருத்தடை சிறப்பு முகாமை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை துணை மேயர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 11ம் தேதியை, ‘உலக மக்கள் தொகை தினம்’ என்று அறிவித்தது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, துணை மேயர் மகேஷ்குமார் தலைமை வகித்து, அவரது தலைமையில் குடும்பநல உறுதிமொழியை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்தனர். இதையடுத்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடும்ப நலக் கட்டுப்பாட்டு முறைகள் (தற்காலிக மற்றும் நிரந்தர) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு விழிப்புணர்வு வாகனத்தை துணை மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த முகாமானது 11ம்தேதி(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் 24ம்தேதி வரை சென்னை மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் 3 அவசரகால மகப்பேறு மருத்துவமனைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த கருத்தடை சிறப்பு முகாமில் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi