கொல்கத்தா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
உலகக்கோப்பையின் 31வது போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் முதல் பவரின் 5வது பந்தில் ரன் ஏதுமின்றி எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்கள் எடுத்து வெளியேற, முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். வங்கதேச அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து சற்று மீட்டனர். 45 ரன்கள் எடுத்த நிலையில் லிட்டன் தாஸ் அவுட் ஆக, 56 ரன்கள் எடுத்து மஹ்முதுல்லாவும் வெளியேறினார்.
ஷகிப் அல் ஹசன் 43 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியில் வங்கதேச அணி 45.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உசாமா மிர் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.