உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஆஷிஷ் சௌதரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான 80 கிலோ பிரிவில் தனது முதல் சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானின் மேசாம் கெஷ்லாகியை தோற்கடித்தார். சுற்று தொடங்கியது முதலே அதிரடி தாக்குதல்களால் மேசாமை நிலை தடுமாற செய்த ஆஷிஷ், லாவகமான நகர்ந்து, அவரது தாக்குதல்களில் இருந்து தப்பித்ததுடன் மேசாம் மீது நுட்பமான தாக்குதல்கள் தொடுத்து இறுதியில் வென்றார். அடுத்த சுற்றில், இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான கியூபா வீரர் அர்லென் லோபஸின் சவாலை ஆஷிஷ் எதிர்கொள்கிறார்.
முன்னதாக, 57 கிலோ பிரிவில் களம் கண்டிருக்கும் முகமது ஹசாமுதின், தனது முதல் சுற்றில் 5-0 என்ற கணக்கில் மாசிடோனியாவின் ஆலன் ரஸ்டெமோவ்ஸ்கியை தோற்கடித்தார். இதனிடையே, உலக சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக களம் கண்ட ஹர்ஷ் சௌதரி, 86 கிலோ பிரிவு முதல் சுற்றிலேயே 0-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் பில்லி மெக் ஆலிஸ்டரிடம் வெற்றியை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 60 கிலோ பிரிவு வீரர் வரிந்தர் சிங்கும் அதே கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முஜிபிலோ டர்சுனோவிடம் தோல்வி கண்டார்.