திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 108 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் 59 பெண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர். இதில் 15 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் மற்றும் 7 பெண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், 22 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசும்போது, ‘’இது தொடக்கம்தான்.
இது போன்ற வேலை முகாம்களை நடத்தி அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை கிடைக்கும் வகையில் ஏற்படுத்தி தரப்படும்’ என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன், வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் விஜயா, திறன் பயிற்சி உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.ந.காமராஜ், முட நீக்கியல் வல்லுநர் பிரித்தா, பேச்சு பயிற்சியாளர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.