திருவள்ளூர்: சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில் தற்போது 1,347 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் மற்றும் வரத்து கால்வாய் மூலமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையின் காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் கடல் போல் மேலேழும் அலைகளால் நீர்த்தேக்கத்தின் மதகுகள் அருகே கரைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் விரிசல்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கரைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று கோரி, சேதமடைந்த கரையின் படம் நேற்று தினகரனில் வெளியானது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் கரைகள் முழுவதையும் கருங்கல் மூட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் பணியில் பொதுப்பணி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.