தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சரளபள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவர் விராலிமலை-கீரனூர் சாலையில் கல்குத்தான்பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தனது மனைவி இளஞ்சியம், மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோருடன் வேலை செய்து வந்தார். அவர்கள் 4 பேரும் செங்கல் சூளையில் உள்ள ஷெட்டில் தங்கியிருந்தனர்.

சுப்பிரமணியத்துக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று (2ம் தேதி) அதிகாலை உரிமையாளர் ஆறுமுகம் செங்கல் சூளைக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாததால் ஷெட்டை திறந்து பார்த்தார். அங்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுப்பிரமணியின் முகம் நசுங்கி இருந்தது. மேலும் அவரது உடல் அருகே ரத்த கறையுடன் பெரிய கல் கிடந்தது. இதனால் தலையில் கல்லை போட்டு அவரை கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வழக்கு பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய இளஞ்சியம் மற்றும் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவரை தேடி வருகின்றனர். மனைவியும், கொழுந்தியாளும் தப்பி ஓடி இருப்பதால் அவர்கள் தான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

 

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்