தம்புல்லாவில் நடைபெற்ற இந்த குரூப் ‘பி’ பிரிவு போட்டியில் இலங்கை – மலேசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சாமரி அத்தப்பட்டு முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை இலங்கை அணி எடுத்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு, 19வது ஓவரின் நான்காவது பந்தில் சிக்சர் அடித்து 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி 119 ரன்களை குவித்தார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே அவரது சிறந்த தனிநபர் ஸ்கோராகும்.
இதன் மூலம் மகளிர் ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் சதம் அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ரன்களின் அடிப்படையில் அத்தப்பட்டு 7வது இடத்தில் உள்ளார். அவர் 136 டி20 போட்டிகளில் 24.44 சராசரியுடன் 3,153 ரன்கள் எடுத்துள்ளார்.