புதுடெல்லி: அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு முதல் அலங்கார ஊர்தி வரை அனைத்தையும் பெண்களை கொண்டே நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் டெல்லி கடமை பாதையில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு இந்த அணிவகுப்பை முழுக்க முழுக்க பெண்களை கொண்டே நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 2024ம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பு திட்டமிடல் தொடர்பாக முப்படைகளுக்கும், பல்வேறு அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பிதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகே குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ இசைக்குழு, அலங்கார ஊர்தி என அனைத்து நிகழ்வுகளும் பெண் அதிகாரிகள் தலைமையில் முழுக்க முழுக்க பெண்களை கொண்டே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.