நாகர்கோவில்: பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் இருந்து நாகர்கோவில், வடசேரிக்கு சென்ற மகளிர் இலவச பயணத்துக்கான அரசு பஸ், அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிறுத்தம் பகுதியில் 2 பெண்கள் கை காண்பித்தும் நிற்காமல் சென்றுள்ளது. உடனே அந்த பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் காரில் பின்தொடர்ந்து சென்று பஸ்சை நிறுத்தி, டிரைவரிடம் உங்கள் வீட்டு பெண்கள் நின்றால் நிறுத்தாமல் செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பஸ் நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பஸ் டிரைவர் ஸ்டீபன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மண்டல பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டார்.